நம்மவர்களில்… இன்றியமையாதவர்கள்…!
இப்பகுதி எமது பிரதேசத்தில் வாழும் விஷேட ஆற்றல்மிக்கவர்கள், எமது சமூகத்திற்கு பிரத்தியேகமான சேவைகளை வழங்கிவரும் தனித்துவமானவர்கள் எனக்குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகும்.
இம்முயற்சி, பிறர் புகழ்பாடும் நோக்கமல்லாது அல்லாஹ் வழங்கிய ஆற்றல்களையும் அருட்கொடைகளையும் பயன்படுத்தி சமூகப்பணி புரிபவர்களை முன்னுதரணமாக காட்டி, எம்மில் பலரையும் இச்சமூகப் பணிக்காகத் தூண்டுவதாகும்.
இந்த வகையில் மண்ணின் மைந்தர்கள் பகுதியில் இம்முறை சமூக சேவையாளர் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றோம்.
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட கணமூலை எனும் அழகிய கிராமத்தில் காதர் சாகிப் மரைக்கார் மதார் உம்மா தம்பதிகளின் ஏழாவது பிள்ளையாக 1922.02.19ம் திகதி பிறந்தார். இவருக்கு ஹமீது ஹுசைன் எனும் பெயர் சூட்டப்பட்டது. இவருடன் மூன்று சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் இருந்தனர். தற்போது இவரும் இவருடைய ஒரு சகோதரியும் வாழ்கின்றனர். ஏனையோர்கள் மரணித்து விட்டார்கள்.
இவர் 1930ம் ஆண்டு கடையாமோட்டை மு.ம.வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்த இவர் ஆறாம் வகுப்போடு கல்வியை இடை நிறுத்திக்கொண்டார். சொந்த வியாபாரத்தில் ஈடுபட்ட இவர் அன்று முதல் இன்று வரை ஆயர்வேத வைத்தியத்தில் பிரபல்யம் அடைந்துள்ளார். சேவையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 1944.12.20ம் திகதி மைமுன் நாச்சியாவை திருமணம் முடித்து திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.
1952ம் ஆண்டு தொடக்கம் 1960ம் ஆண்டு வரை கணமூலை சாகுல் ஹமீதொளி ஜூம்ஆப் பள்ளி நிருவாகத்தின் பொருளாளராகவும் 1960ம் ஆண்டு தொடக்கம் 1983ம் ஆண்டு வரை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இந்த ஏக காலத்திலயே கரப்பந்தாட்ட சங்கம், பயிர் செய்கை சங்கம், கிராம முன்னேற்ற சங்கம், ஆகிய முப்பெரும் சங்கங்களின் தலைவராகவும் திகழ்ந்தார்.
நான்கு பெண் மூன்று ஆண் பிள்ளைகளின் தந்தையாகக் காணப்பட்ட இவரின் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவமாக பெண் பிள்ளைகளில ஒருவர் பிறந் நான்கு வயதில் வபாத்தானதையும், ஆண் பிள்ளைகளில் ஒருவர் 52 வயதில் வபாத்தானதையும் சுற்றிக்காட்ட மறக்கவில்லை.
1978.06.12 ம் திகதி மாவட்ட சமாதான நீதவானாக சத்தியப்பிறமானம் செய்து கொண்ட இவர் தனது சேவையின் நிமித்தம் மாவட்ட தேசசக்தி விருதை 2005 ம் ஆண்டு தனதாக்கிக் கொண்டார். இவ்வாறு தனது பெயரையும் புகழையும் ஆலமர விருட்சம் போல் பரப்பிக் கொண்ட இவரை முழுக்கிராமமே மதிப்பும் மரியாதையோடும் பார்ப்பதோடு எல்லோரும் செல்லமாக ஹமீசப்பா என்று அழைக்கிறார்கள்.
(தகவல்: பெளசுல்)

