மனிதனது வாழ்வு நேரத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப் பட்டிருக்கின்றது. குர்ஆனின் பல இடங்களில் நேரத்தின் மீது சத்தியம் பண்ணியே வஹியினுடைய செய்திகளை அல்லாஹ் கூறுகின்றான். தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது என்று அல்லாஹ் குர்ஆனிலே கூறியுள்ளான். ஐங்கால தொழுகையும், இஸ்லாத்தின் ஏனைய கட்டாயக் கடமைகளான நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகியவை கூட குறித்த காலப்பகுதிகளில் நிறைவேற்றுபவைகளாக இருக்கின்றன. இது நேரத்தின் அவசியத்தையும், அது மனித வாழ்வில் எந்தளவு பின்னிப் பிணைந்துள்ளதெனவும் எடுத்துக் காட்டுகின்றது.
இன்று மனிதர்கள் நேரத்தின் பெறுமதியை உணராதவர்களாக இருக்கின்றனர். நேரத்தை சரியாக திட்டமிடாததினால் மனிதர்கள் பாராமுகமானவர்களாக, போடுபோக்கு தன்மை உடையவர்களாக காணப்படுகின்றனர். குடும்பத்தில் பிரச்சினைகள், கசப்புகள், பிள்ளைகளின் மீது கவனயீனம், சமூகத்தின் மீது அக்கறையின்மை என ஒரு தனி மனிதன் சந்திக்கும் கஷ்டங்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.
சஹாபா தோழர்களும், அதற்கு பிறகு வந்த தாபியீன்களும் எம்மை போன்ற மனிதர்களே. இஸ்லாத்தின் உயர்ச்சிக்காக பாடுபட்ட பல அறிஞர்களும், நன்மக்களும் மனிதர்களே. இவர்களும் எம்மைப் போன்று சராசரியாக 60 – 70 வயதுக்குட்பட்ட வாழ்வையே கழித்திருக்கின்றனர். சொற்பமான வாழ்வு காலத்தில் இவர்கள் நேரங்களை திட்டமிட்டு வரலாற்று சாதனைகளை படைத்தனர். பல்வேறு சமூக மாற்றங்களுக்கும், புரட்சிகளுக்கும் வித்திட்டனர். இவ்வாறு வரலாறு படைத்த மாமனிதர்களது வாழ்க்கை வரலாறுகள் படிக்கப்பட வேண்டும். நேரத்தை அல்லாஹ் கூறிய அடிப்படையில் திட்டமிட்டால் தான் சமூகத்தில் மாற்றத்தை காண முடியும்.

