PuttalamOnline

தம்புள்ள பள்ளிவாசலை அகற்றுமாறு சமய விவகார அமைச்சர் டி.எம்.ஜயரட்ன உத்தரவு!

| 0 comments

(Ibnu Thahir)

தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசலை அகற்றுமாறுபிரதமர் அலுவலக முத்திரையுடன் வெளியான உத்தரவு அறிக்கை

அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இஸ்லாமிய சமய தலைவர்கள், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, மேல் மாகாண ஆளுநர்  அலவி மௌலானா, பிரதியமைச்சர்கள், அப்துல் காதர், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ன

உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் உள்ள நிலையில் இத்தகைய சிறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, இனங்கள், மதங்களிடையே அநாவசிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது” எனவும் பிரதமர் கூறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எம்.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் குறித்த பள்ளிவாசலுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் தம்புள்ள பிரதேச செயலாளர் ஆகியோரை அமைச்சர் ஹக்கீம் சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

இதன்போது, பள்ளிவாசலை வேறு பொருத்தமான இடம் ஒன்றுக்கு மாற்ற இணக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக இலங்கை பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பள்ளிவாசலை எப்போது இடம்மாற்றுவது என்று முடிவு எடுக்கப்படாது போனாலும் தற்போது முத்திரையிடப்பட்டுள்ள பள்ளிவாசல் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இருந்த வந்த இந்தப் பள்ளிவாசலை அகற்றக் கோரி பௌத்த பிக்குகளும் சிங்களப் பேரினவாத சக்திகளும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தினர்.

தம்புள்ள புனித பிரதேசத்தில் இருந்து பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் என்று கூறி தொழுகை நடத்த விடாமல் தடுத்த அவர்கள் அதை இடிக்கவும் முயன்றனர்.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன் இலங்கைப் படையினர் குவிக்கப்பட்டு பள்ளிவாசலை இலங்கை அரசு மூடியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)