PuttalamOnline

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம்; ஜெனிவாவில் சுவிஸ் பிரதம சங்கநாயக்கருடன் BRN சந்திப்பு!

| 0 comments

(ஜெனிவாவில் இருந்து முயீஸ் வஹாப்தீன்)

இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜெனிவா நகரில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த விகாரையின் பிரதம விகாராதிபதியும் சுவிற்சலாந்தின் பிரதம சங்கநாயக்கருமான வணக்காத்திற்குரிய தவலம தம்பிக்க தேரர், ஜெனிவாவில் இயங்கும் Brotherhood Rights Network எனும் அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

ஜெனிவா பௌத்த நிலையத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதம சங்கநாயக்கர் வணக்காத்திற்குரிய தவலம தம்பிக்க தேரர் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

Brotherhood Rights Network அமைப்பின் தலைவர் முயீஸ் வஹாப்தீன் மற்றும் அதன் பிரதித் தலைவரான அஹ்சன் ஜுனைதீன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டு அதன் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இந்நிலையில் அதனைப் பாதுகாப்பதற்கும் அதன் மூலம் இன ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜெனிவா சர்வதேச பௌத்த விகாரையின் பிரதம விகாராதிபதி தவலம தம்பிக்க தேரரிடம் வலியுறுத்திய இவர்கள் அதற்கு அவரது ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த தம்பிக்க தேரர் துரதிருஷ்டவசமாக இடம்பெற்ற மஸ்ஜித் தாக்குதல் சம்பவத்திற்கு கவலை வெளியிட்டதோடு இந்த விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தம்புள்ளை ரங்கிரி விகாராதிபதி மற்றும் அரச உயர் மட்டத்தினருடன் இது தொடர்பாக தான் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்ததோடு அதன் மூலம் நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

இந்த நல்லெண்ண சந்திப்பும் கலந்துரையாடலும் மிகவும் திருப்திகரமாக இடம்பெற்றதாக Brotherhood Rights Network அமைப்பின் தலைவர் முயீஸ் வஹாப்தீன் ஜெனிவாவில் இருந்து தெரிவித்தார்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)