PuttalamOnline

வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் – அதிகார அரசியலுக்குள் புதைந்து போன அமுக்கச் சக்தி

| 1 Comment

(அபூ மர்யம்)

தம்புள்ளை விவகாரத்துடன் சூடு பிடிக்க ஆரம்பித்த பௌத்த இஸ்லாமிய முரண்பாடு நாட்டின் ஆங்காங்கே தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மற்றுமொரு வடிவில் வடக்கில் தமிழ் முஸ்லிம் முரண்பாடும் வலுப்பெற்று வருகின்றமை இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியம், இருப்பு தொடர்பில் ஐயப்பாடுகளை உருவாக்கி உள்ளது.

முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளும், சமூகத்  தலைமைகளும் இது விடயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு செலுத்தி வருவதும் உயர்மட்ட அரசியல் மற்றும் சர்வதேசிய அழுத்தங்களினூடாக இனங்களுக்கிடையிலான சகவாழ்வை உறுதி செய்ய முயற்சி எடுத்து வருவதும் பாராட்டத்தக்கது.

தம்புள்ளை விவகாரத்தில் கௌரவ ஜனாதிபதி அவர்களின் அமைத  ஒருவகையான இராஜதந்திர பொறிமுறையாக நோக்கப்பட்டாலும், தொடரும் இஸ்லாமிய விரோத சக்திகளின் செயற்பாடுகள் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் சட்டயாப்பின் படி பெற்றுள்ள மத உரிமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலேயே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொடராக நாட்டில் பரவலான இடங்களில் முஸ்லிம்களின் மத வழிபாடுகளில் குறுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை கடந்த மூன்று தசாப்த காலமாக தமது தாய் மண்ணில் இருந்து பாசிசப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னுமொரு வடிவில் இன அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றது.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு சக்திகள் தமது தரப்பு நியாயங்களை முன்னிருத்தி ஒன்றிணையாத வேலைத் திட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்துள்ளனர். மிக அண்மைக் கால மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம், வன்னி தமிழ் மக்களின் தற்காலிக இடப்பெயர்வுகளின் போது அரசாங்கமும் அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சும் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களைப் போல் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏன் கரிசனை செலுத்தவில்லை என்பது அரசியல், சமூக நோக்கில் கேள்விக்குரியாகவே அமைந்துள்ளது.

தற்பொழுது வன்னிப் பிரதேசத்தில் அமைச்சர் ஒருவருக்கும், மன்னார் ஆயர் மற்றும் மன்னார் நீதவானுக்கும் இடையிலான தொடர் முறுகல்கள் கையாளப்பட்ட விதத்தை நமது சமூகத் தலைமைகள் இனவாத நோக்கோடு தேசிய முஸ்லிம் சமூகத்தை விழிப்புணர்வூட்டி வருகின்றமை பொருத்தமற்ற வழிமுறையாகவே நோக்கப்பட வேண்டும்.

இந்நாட்டை அழிவுக்குட்படுத்திய யுத்தம் முடிவுற்று கடந்த மூன்று வருட காலத்தில் வட புல முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறிய போது குறிப்பாக மன்னாரிலும், யாழ்ப்பானத்திலும் பணியாற்றிய அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் இனவாதிகளாக அசிரத்தையுடன் செயற்பட்டமையை ஏன் அன்று அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த இந்த அரசியல்வாதிகள், இன்றுபோல் தேசியமயப்படுத்தவில்லை அல்லது அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

குறிப்பாக இவ்விவகாரங்ளை கையாண்ட அரசியல்  லைமைகள் தமது சமூகத்தின் மீள்குடியேற்ற நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முற்படுத்தி அதனையே செயற்படுத்தியும் வந்தார்கள். இதன் காரணமாக தமது சமூகத்தை பாதிக்கின்ற விவகாரங்களிலும் அரசாங்கத்தோடு முரண்படுவதைத் தவிர்த்து இணக்க அரசியலையே செய்து வந்தார்கள் மட்டுமல்லாமல் அரசாங்கத்துக்கு தலையிடியாக உள்ள விடயங்களை எதிர்க்கின்ற விடயங்களில் முஸ்லிம் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கி தமது நற்பெயரை தக்கவைத்து திறமையாக செயற்பட்டு வந்துள்ளார்கள்.

மன்னார் உப்புக்குளம் பிரச்சினையினை இனவாத முகத்தோடு முன்னெடுப்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியும். ஆனால் இஸ்லாத்தை கொள்கையாக நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தும் சமூகத் தலைமைகள் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்கள் மீதுள்ள தார்மீக மார்க்கக் கடமையாகும்.

வடபுலத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் சகோதரர்கள் சுமார் 135,000 பேர் வெளி மாவட்டங்களில் கடந்த 22 வருடங்களாக வசித்து வருகின்றனர்.சுமார் என்பது வீதத்துக்கும் அதிகமானோர் மீள்குடியேறுவதில் கரிசனை இன்றி தற்பொழுது வசித்து வருகின்ற பிரதேசங்களிலேயே நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க விரும்புவதாக அம்மக்கள் மத்தியில் செய்யப்பட்ட அண்மைய UNHCR அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.பொதுவாக மக்களின் மனோபாவமும் அவ்வாறே காணப்படுகின்றது.

கடந்த 10 வருடங்களாக உப்புக்குளத்தில் வசித்து வருகின்ற 44 கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள சகோதரர்களின் பிரச்சினையோடு, புத்தளத்தில் வசித்து வருகின்ற 135,000 வட புல முஸ்லிம் சகோதரர்களால் புத்தளம் உள்ளூர் சமூகம் எதிர் நோக்கி வருகின்ற பிரச்சினைகளையும் சட்ட ரீதியாதகவும் சமூக ரீதியாகவும் நீதமாக பார்க்க வேண்டிய பொருப்பு முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தி வருகின்ற MCSL மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல  உலமா போன்ற சமூக அமைப்புக்களையும் இந்நாட்டில் வாழுகின்ற புத்தி ஜீவிகளையுமே சாரும்.

மன்னார் உப்புக்குளம் மட்டுமல்ல வட புலத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு நிறையவே குறுக்கீடுகள் காணப்படுகின்றது.குறிப்பாக சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்களின் புறக்கணிப்பு தொடக்கம் உள்நாட்டு சகோதர தமிழ் இனவாத சக்திகளால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு வரை குறுக்கீடுகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. நிச்சயம் முஸ்லிம் சமூகத்தின் சமூகத் தலைமைகளான MCSL மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இது விடயத்தை தேசிய முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி தீர்வுகளைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டியது அவர்கள் மீதுள்ள கடமையாகும்.

மன்னார் நீதவான் யூட்சனுடன் அமைச்சர் றிஷாத் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்தி இதனை இனவாதக் கண்ணோட்டத்தோடு முன்னகர்த்திச் செல்வது இஸ்லாத்தின் நீதிக்கு வைக்கும் வேட்டாகும். பிழை செய்தவர்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பிழை செய்தவர்களை பாதுகாப்பதற்கு அவர்களின் அழுத்தங்களுக்கு உட்பட்டு அனைத்து முஸ்லிம் சக்திகளையும் ஒன்று திரட்ட முட்படுவது முழு முஸ்லிம் சமூகத்துக்கும் செய்யும் பாரிய துரோகமாகும்.

அமைச்சர் றிஷாத் மட்டுமல்ல எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் விலை போகாமல் பிரச்சினைகளை நீதமாகக் கையாள வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகம் MCSL மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்புகளிடம் எதிர்பார்க்கின்ற விடயமாகும்.

அரசியல்வாதிகளின் வீடுகளில் இருந்து அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்து பொது இடங்களில் அமர்ந்து நியாயமான எமது பிரச்சினைகளை இனம் கண்டு அதற்கான தீர்வுகளை இந்நாட்டின ஜனநாயக மரபுகளுக்குள் நின்று பெற்றுக்கொள்ள MCSL மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்புக்கள் காத்திரமாக செயற்பட வேண்டும்.

பலவீனமான நிலையிலும் எமது சமூகத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் கூட்டாக செயற்பட்டு வருகின்ற MCSL மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்புக்களின் தலைமைகள் தமது முடிவெடுக்கும் தளத்தில் சம அந்தஸ்த்து உடையோரையும் அரவணைத்து செயற்பட்டால் மட்டுமே அழுத்தங்களுக்கு அப்பால் நின்று சமூகத்தை வழிநடாத்த முடியும்.

One Comment

  1. ‘யார் பொய்யான பேச்சையும் பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)