கோவிட் வைரஸ் தோற்று மூலம் இறந்தவர்களின், பலவந்த ஜனாஸா எரிப்பை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று (28.12.2020) புத்தளம் நகரிலும் பிரமாண்டமான எதிர்ப்பு அமைதிப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. புத்தளம் ஐக்கிய மக்கள் அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தது.
இந்த அமைதிப்பேரணியில் சர்வமத அமைப்பு, புத்தளம் அரசியல் தலைமைகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், ஜனாஸா நலன்புரி சங்கம், பள்ளிவாசல்கள் நம்பிக்கை சபை பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், இளைஞர் அமைப்புக்கள், முச்சக்கர வண்டி அமைப்புக்கள் உட்பட ஏனைய தொழில்துறை அமைப்புக்கள், வர்த்தகர்கள்,சிவில் சமூகம், தாய்மார் சிறுவர் சிறுமியர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு ஜனாஸா எரிப்புக்கு தமது எதிர்ப்பினையும் அதிருப்தியினையும் வெளியிட்டனர்.
புத்தளம் நகரில், கொழும்புமுகத்திடலில் இடம்பெற்ற இப்பேரணியில் கலந்துகொண்டோர் மும்மொழிகளும் பதாகைகள் ஏந்தி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் சர்வமத அமைப்புப் பிரதிநிதிகள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் போன்றோர் தமது கருத்துக்களையும் ஆதங்கங்களையும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. சோனகர் டொட் கொம் இணையத்தளம் இதனை நேரடி ஒளிபரப்பு செய்தது.
ஜனாஸா எரிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை சமர்பிப்பதற்காக வருகைதந்தோர் அதில் கையொப்பமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் முடிவில் தாம் வைத்திருந்த வெள்ளைத் துணிகளை அதே இடத்தில் கட்டியதையும் காணக்கூடியதாக இருந்தது.
Share the post "இறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்"