சட்டத்தரணி ஏ.எம்.ஐ. ஷஹீத்
எம். எஸ். அப்பாஸ்
சட்டத்தரணி ஏ.எம்.ஐ. ஷஹீத் எனது தயாரின் இளைய சகோதரர். புத்தளத்தில் ஐம்பதுகளைத் தாண்டியவர்களுக்கு இவர் பற்றிய நினைவுகள் மனதில் மங்கலாக இருக்கக்கூடும். நன்றாகத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கக் கூடும் என்று நான் நம்பவில்லை. காலஞ்சென்ற டாக்கர் எம்.எஸ்.எம். ஹனிபா அவர்களின் நெருங்கிய நண்பர்.
நீன்ட காலமாக புத்தளத்தில் சட்டத்தரணியாக இருந்து ஓய்வு பெற்ற ஏ.எம். ராஸிக், இங்கிலாந்திலே சட்டத்துறை தொழில் செய்யும் எனது இளைய சகோதரர் ரவூப் நிஸ்தார், அவரது அன்பு மனைவி, எனது இளைய, கடைசி மகள்மாரான நதீஹா அப்பாஸ், சாரா அப்பாஸ். அவரின் கணவர் ஏ.எச்.சம். நுவ்மான் என 07 சட்டத்தரணிகளைக் கொண்ட எமது குடும்பத்தின் முதன் முதல் சட்டத்தரணி.
சுமார் 15 ஆண்டுகள் புத்தளம் நீதி வலையத்துள் சட்டத்தரணியாகப் பணிபுரிந்துவிட்டு பின்னர் நீதித் துறைக்கு (Judiciary ) சென்றதாலும், திருமண உறவு மூலம் கண்டிக்கு போனதாலும் புத்தளத்தவர்கள் நினைவில் இருந்து மறகப்பட்டவர் எனலாம்.
முல்லைத் தீவு, வவுனியா, மாத்தறை போன்ற பிரதேசங்களில் மேலதிக நீதவானாக (Addl.Magistrate) கடமையாற்றிய இவர், சுகவீனம் காரணமாக ஓய்வு பெற்று பின்னர் சிறிது காலம் கண்டியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். கண்டியில் காதி நிதிபதியாக கடமையாற்ற பொருத்தமானவர் ஒருவர் இல்லை என்பதால் 1990 களில் அப்போதைய நீதி சேவை ஆணைக் குழுத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் சிறிது காலம் கண்டி மாவட்டத்துக்கான காதி நிதிபதியாகவும், வக்ஃபு மேன் முறையீட்டு (Wakf Tribunal) ஆகவும் கடமையேற்றார். அவரது உடல்நிலை மேலும் மேசமாகியதால் அவற்றையும் ஓதுக்கிவிட்டு தனது மரணத் தருவாய் வரையில் கண்டி ‘பியாஸோ கார்டன்ஸ்’ இல் தனது அமைதியான ஓய்வு வாழ்வை அனுபவித்துவிட்டு தனது 83 ஆவது வயதில் மன அமைதியோடு இறையடி சேரந்தார்.
புத்தளம் நகரத்தைப் பொறுத்தவரையில் நான் பெருமைப்பட வேண்டிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. ‘சர்கா அப்பா’ என்று அழைக்கப்பட்ட சேகு அலி அசன் குத்தூஸ் எனது தாய்வழிப் பாட்டனாராவார். புத்தளம் நகரத்தின் கல்வி, கலாசார, சமுக நலன்களில் அக்கறை கொண்டு உழைத்தவர். புத்தளம் கச்சேரியில் அந்த நாட்களில் உத்தியோகம் செய்த சின்ன மீராப்பிள்ளை , செய்யது ஹுசைன், அசன் குத்தூஸ் ஆகிய இந்த மூவருக்கும் இந்த நகரத்தின் அந்தக் கால வரலாற்றில் தனித்துவமான பங்க உண்டு. படித்தவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் இவர்கள்தான். எனது பாட்டனார் அசன் குத்தூஸ் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

எனது தாய்வழிப் பாட்டனான அசன் குத்தூசின் மகனான சட்டத்தரணி இப்னு சஹீத் புத்தளம் நகரத்தின் பேர்போன சமூக மேம்பாட்டு அமைப்பான இஸ்லாமிய முன்ணி இயக்கத்தின் தாகப உறுப்பினர். அந்தக் காலங்களில் மீலாத் விழாகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று உழைத்தவர். வாழ்வின் முடிவை எண்ணிக் கொண்டிருந்த நாட்களில் கூட இஸ்லாமிய முன்ணி இயக்கம், புத்தளத்து மீலாத் விழாக்கள் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்.
(புகைப்பட உதவி ரவூப் நிஸ்தார் – இங்கிலாந்து)
/Zan