புத்தளம்

வரலாற்றுப் பெருமைமிகு புத்தளம்

puttalam_cha_mapகொழும்பில் இருந்து வடக்கு நோக்கி நீர் கொழும்பு பாதையூடாக நேராக வந்தால் 116 வது கி.மீ. தூரத்தில் புத்தளம் கடல் நீரேரியைத் தொட்டவாறு காட்சி தரும் அழகான சிறிய நகரம் புத்தளம். கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 30 கி.மீ. நீண்டு கிடக்கும் புத்தளம் அல்லது கல்பிட்டிக் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது.

புத்தளம் நகரிற்கும், கல்பிட்டிக்கும் இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு முக்கிய பங்குண்டு. டச்சுக்காரர் காலத்தில் இந்த ஏரியைப் பயன்படுத்தித்தான் கல்பிட்டி, புத்தளம் நகர்களை இணைத்த கொழும்பு வரைக்குமான “டச்சுக்கால்வாய்” நீர்ப் போக்குவரத்து ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலம் வரை நடைபெற்றது. உள் நாட்டிற்குள் அமைந்த உலகின் மிகப் பெரிய நீர்ப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட முடியும். ஆங்கிலேயர் காலத்தின் பிற்பகுதியில் கொழும்பிலிருந்து கல்பிட்டி வரை தரைப்பாதை திறக்கப்பட்டதன் பின்னர்தான் இந்நீர்ப் போக்குவரத்து படிப்படியாக நிறுத்தப்பட்டது.

இரு நூறு வருடங்களுக்கு முன்னர் புத்தளம் நோக்கி கடல் ஏரியூடாக வந்த ஐரோப்பிய யாத்திரிகர்களில் சிலர் இரண்டு, மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது தலை நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த மினாராக்கள் சிலவற்றைக் கொண்ட பள்ளிவாசல்களைக் கண்டதாகவும் அதை அண்மித்ததும் புத்தளத்தை வந்தடைந்துவிட்டதைத் தாம் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

puttalamஅவர்கள் குறிப்பிட்ட அந்த வரலாற்று பூர்வமான பள்ளி (அல்லது தர்ஹா) இன்று இல்லை. ஆனால் அதே இடத்தை அதேவகையில் தூரத்திலிருந்து பார்க்கக்கூடிய பிரமாண்டமான பல கட்டிடக் கலையழகுடன் கூடிய புத்தளம் முஸ்லிம்களின் பெரிய பள்ளிவாசல் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது. அது புத்தளம் நகரினதும் புத்தளம் பிரதேசத்தினதும் மாற்றமுடியாத ஒரு பெரிய அடையாளத்தைக் காட்சிப்படுத்தும் ஒரு வரலாற்றுச்  சின்னமுமாகும். புத்தளம் பெரிய பள்ளிவாசல் தனக்குள் 600 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றை உள்ளடக்கியுள்ள ஒரு மகத்தான கட்டிடக் கலைச்சின்னம் என்பதை உணர்ந்திருப்பவர்கள் ஒரு சிலர் தான்.

‘புத்தளம்’ நகரின் பெயர் தான் மாவட்டத்தின் பெயருமாகும். புத்தளம் என்பது நகரையும் குறிக்கிறது மாவட்டத்தையும் குறிக்கிறது. சிலாபம், குருநாகல் நகரங்கள் பெற்றுக்கொள்ளாத பல முக்கியத்துவம் நவீன வரலாற்றில் புத்தளம் பெறக்கூடியதாக இருந்தது ஒரு பெரிய வரலாறு.

12ம் நூற்றாண்டின் பின்னர் மத்திய மலை நாட்டிலும் குருநாகல் இராச்சியத்திலும் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கும் குருநாகல் உட்பட மத்திய மலை நாட்டிற்குத் தேவையான கடல் வழிப்பாதை, துறைமுகம், பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், சிங்கள அரசர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் தேவையான ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், உணவுப்பதார்த்தங்கள், உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், வெளி நாடுகளுக்கு அனுப்புதல், வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளுதல் ஆகிய பல தேவைகளை புத்தளமும் கல்பிட்டியும் தான் நிறைவேற்றின.

புத்தளம் உள்துறைமுகமாகச் செயற்பட்டது. கல்பிட்டி கிட்டத்தட்ட சர்வதேசத் துறைமுகமாக இருந்தது. இவற்றிற்கு சுமார் 20 , 30 மைல் தொலைவில் இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த குதிரை மலைத் துறைமுகம் அமைந்துள்ளது. புத்தளம், கல்பிட்டி ஆகிய இரண்டும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்திய இரு முக்கிய துறைமுகங்களாக சுமார் 2000 ஆண்டு வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுபூர்வமான நகரங்களாகும்.

இந்த இரு நகரங்களினதும் துறைமுக வர்த்தக நடவடிக்கைகளும், கடல் வாணிபத்திற்கான  வசதியும், புவியியல் ரீதியான அமைவிடமும், கேந்திர முக்கியத்துவமும் வரலாற்றில் எப்போதுமே உரோமர், பாரசீகர், பீனிஷியர், சபாயியர், அரேபியர் போன்றோரையும் பின்னர் போர்த்துக்கேயரையும், டச்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும் கவரத்தூண்டிய விடயங்களாக இருந்தன.

போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் கல்பிட்டியையும் புத்தளத்தையும் கைப்பற்றித் தமது வர்த்தகத்தையும் அரசியல் இராணுவ நடவடிக்கைகளையும் பாதுகாத்தனர். கோட்டைகள் அமைத்தனர். இந்த வரலாறுகள் அனைத்தினதும் மற்றொரு சான்றாகத்தான் கல்பிட்டிக் கடல்நீரேரியைத் தொட்டவாறு கம்பீரமாகத் தோற்றமளிக்கும் டச்சுக்கோட்டை இன்றும் காட்சி தருகிறது.

கல்பிட்டி துறைமுகத்தையும் புத்தளம் துறைமுகத்தையும் கண்டி மன்னன் தனது இரு கண்களாகக் கருதினான். வரலாற்றுக் காலம் முழுக்க கண்டி, குருநாகல், அனுராதபுர இராச்சியத் தொடர்புகளும் வடமாநிலத் தொடர்புகளும், தமிழ் நாட்டுத் தொடர்புகளும் தொடர்ந்து இருந்து வந்தது. அதனால் புத்தளம் மாவட்டம் தமிழ் மொழிக்கும் தமிழர் தொடர்புக்கும் அதே போல் சிங்களவர்களின் அரசியல் பொருளாதார குடியேற்றத் தொடர்புகளுக்கும் தொடர்ந்து ஆளாகி வந்துள்ளதால் முஸ்லிம்களை உள்ளிட்ட மூவினமக்கள் தொடர்பும் உறவும் இஸ்லாம் சமயத்தோடு பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ சமயத் தொடர்புகளும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக அமைந்துள்ளதுன. பரந்து கிடக்கும் பல முஸ்லிம் கிராமங்களோடு சங்கமிக்கும் தமிழ், கிறிஸ்தவ, சிங்களக்கிராமங்களும் புத்தளம் மாவட்டத்தின் ஆள்புலத்தொடர்பின் பல்பரிமாணங்கள் எனலாம்.

Puttalam festival 2013 (11)முஸ்லிம்களைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம் வரலாற்றை தன்னுள் அடக்கி இன்னும் சுறுசுறுப்பாக இயங்கும் கேந்திர நிலையங்களில் புத்தளமும் ஒன்று. கல்பிட்டித் துறைமுகம், குதிரைமலைத் துறைமுகம் கூறும் பாரசீகர், பீனிஷியர், அரேபியர் வரலாற்றிலிருந்து இங்கு வந்த வரலாற்றுத் தொடர்புகள் ஆரம்பமாகின்றன. 16ம் நூற்றாண்டிற்குப் பின்னர் கேரளத்துடனும், தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் வர்த்தகப் பெருமையுடன் வாழ்ந்த பகுதிகளுடனும்  இத்தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

புத்தளம் என்ற பெயர் எப்போது பதிவாகியது என்பது சரியாகத் தெரியவில்லை ஆனால் 14ம் நூற்றாண்டில் இங்கு கால் பதித்த இப்னு பதூதா ‘பத்தாளா” என்று குறிப்பிட்டுள்ளார். ‘புத்தளம்’ என்றோ அதற்கு கிட்டிய மற்றொரு பெயரிலோ இது அழைக்கப்பட்டதற்கும் , அது ஒரு சுறுசுறுப்பான கடல் வணிக நகராக இருந்ததற்கும் முஸ்லிம் ‘சுல்தான்’ ஒருவர் அதை ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்பதற்கும் இபுனு பதூதாவின் ‘ரேஹ்லா’ வில் பல சான்றுகள் உள்ளன.

இன்று புத்தளம், கல்பிட்டி இரண்டும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கடலோர நகரங்களாகவும், வர்த்தக நகரங்களாகவுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன. சிறிய, பெரிய அளவில் பலநூறு கிராமங்கள் ஒன்றிணைந்து கைத்தொழில், கல்வி, வர்த்தகம், மீன்பிடி, உப்பு உற்பத்தி, இறால் பண்ணை என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்கேற்றுவருகின்றன.

33 thoughts on “புத்தளம்

  1. புத்தளம் ஒரு இயறகை அழகு பொருந்திய ஒரு இடம் . களப்பு நிலமும் இயறகை வளங்களும் தன்னகத்தே கொண்ட அழகிய நகரம் . பச்சை பசேல் என்று காட்சிதரும் அழகிய சோலைகள் மிகுந்த இடம் தண்ணீர் பிரச்சினை ஒன்றை தவிர வேறு இயறகை எழில் நகரம் உப்பளங்களும் தென்னை தோப்புகளும் புத்தளத்திட்கு மேலும் எழில் சேர்கின்றன. நுரைசோலை மின் நிலையம் எந்தளவிட்கு புத்தளத்தின் எழிச்சியை பத்துக்கும் என்பதே மக்களின் மனதிலுள்ள கவலை

  2. நல்லத் தம்பி புலவரது பாடல் நினைவுக்கு வருகிறது.

    எத் தலம் தான் சென்றிடினும்
    எவ்விதம் தான் நொந்திடினும்
    புத்தளம் நன்றென்று போயடைக.
    புத்தளத்தார் பார்த்திருக்க உண்ணார்
    பசித்த முகம் பார்த்தருளுவார்.
    கோத்திரத்துக்குரிய குணம்.

  3. உப்புத்தளம் என்ற புனை பெயர் கொண்ட புத்தளம்,
    என் அன்பின் இனியவளின் பிறப்பிடம்,
    கொழும்பில் பிறந்த என்னை சுற்றுசூழல் கவர்ந்த இடம்,
    இத நாளோ என்னவோ என் இனியவளே வேண்டும் என என் மனம் சொன்னவிதம்,
    பாகுபாடின்றி அன்போடு அரவணைப்போரின் இருப்பிடம்,
    வாரம் ஒரு முறை வருவோர் இங்கு வணிகம் பார்த்து செல்லுமிடம்,
    மீன் வளம், தென்னை வளம் என இன்னோரன்ன வளங்களை கொண்ட இடம்,
    இவ்விடத்தயா வஞ்சக மனமுடையோர் குப்பை கழிவை கொட்டி விகார மாக்கி பார்க்க நினைக்கின்றனர்,
    இ லவ் புத்தளம்

  4. என் அன்பின் இனியவளான மனைவியின் பிறப்பிடம்,
    பாசனத்தின் பிறப்பிடம், வந்தோரை வாழவைத்த இடம்
    என் தீனின் அறிவை வளர்த்த இடம்,
    என் மனதுக்கு இதமான இடம்,
    உப்பின் தளம்
    புத்தளம்
    I லவ் புத்தளம்

  5. எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே புத்தளம் போனாலும் புத்தியோடு போ என்பது நம் ஊரை குறிப்பிடுவதல்ல இதை குறிப்பிட்டவர் ஒரு இலங்கையரும் அல்ல.அதன் விளக்கம் எந்த தளம் போனாலும் புதிய தளம் போகாதே புதிய தளம் போனாலும் புத்தியோடு போ என்பதுதான்.
    இதை சரியாஹ புரிந்து கொல்லாத சிலர் அல்ல பலர் puttalathai தவராஹ கொச்சை படுத்துஹின்றனர்.
    இனியாவது புரிந்து கொள்ளுங்கள்…….

  6. நான் கடந்த 12 வருடங்களாக கொலோம்போ வசிக்கின்றேன். புத்தளம் நான் வாழ்ந்த இடம், மறக்க முடியாது .

  7. புத்தளம் ஆனது மிகவும் அழகான ஊர் நானும் அங்கு வாழ்வதட்கு ஆசைப்பட்டேன் அனால் அது நடக்கவில்லை.

  8. எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே புத்தளம் போனாலும் புத்தியுடன் போ ? இந்தச் சொல்லுக்கு சில சகோதரிகள் விடைகான முடியாமல் முடித்திருக்கின்றார்கள் சகோதரிகளே உங்கள் சிந்தனைகளை சற்று ஆழமாக சுழலவிட்டுப் பாருங்கள் பல தசாப்தங்களுக்கு முன்பு கூறப்பட்ட அந்தச் சொல் ஒரு அறிவாற்றல் கொண்டவர் அனுபவரீதியாக சொல்லப்பட்ட சொல் அல்ல என்பது தெளிவாகப் புரிகின்றது காரணம் இன்று புத்தளம் நகரையும் நகர்புரத்திற்கப்பாலும் இருக்கும் செழிப்பைப் பாருங்கள் இத்தனைக்கும் சொந்தக்காரர்கள் யார் புத்தளம் மண்னில் பிறந்தவர்களா ? இல்லையே ,மன்னார்,முல்லைதீவு,யாழ்ப்பாணம்,கண்டி கொழும்பு,என்று சொல்லிக்கொண்டே போகலாம்,தமிழ்,சிங்கள முஸ்லிம் என்று அனைத்து இன மக்களும் சொந்தமாக வியாபார ஸ்தளங்கள் வீடுகள் இன்னும் நிறுவனங்கள் என்று உருவாக்கி முன்னேறி வருகின்றார்களா இல்லையா ? இன்று புத்தளம் மண்னில் பிறந்த மக்களை விட புத்தளம் மண்னில் குடியேரிய மக்களே அதிக செல்வந்தர்களாக இருக்கின்றார்கள் இந்த உண்மை உங்கள் எத்தனை பேருக்குத் தெரியும் இதனைப் பார்த்து புத்தளம் மக்கள் பொறாமைப் பட்டதுண்டா ? இதனை ஏன் நான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் நான் வெளிநாட்டில் தொழில் புரியும் காலங்களில் சில நண்பர்கள் புத்தளத்தின் மேற்குறிப்பிட்ட விடயத்தைக் கூரி புத்தளத்தைப் பற்றிக் கீழ் தரமாக பேசுவார்கள் இந்த விடயம் என் மனதை சற்று பாதித்தது எனவேதான் நான் சவுதி ஜித்தாவில் இருக்கும் (2008) சமயம் புத்தளம் பற்றி ஒரு பாடலை எழுதி பாடி வெளியிட்டேன் ? தளம் தளம் எத்தளம் அழகானதித்தளம் வந்தோரை என்றுமே வாழவைப்பதெத்தளம் அது புத்தளம் என்று ஆரம்பிக்கும் பாடல் இப்பாடல் புத்தளத்தில் உள்ள நண்பர்களிடம் இருக்கும் கேட்டுப் பாருங்கள் ! புத்தளம் போனாலும் புத்தியுடன் போ என்பதின் பொருள் ? புத்தியுடன் போ பிழைத்துக் கொள்வாய் இப்போது புரிகின்றதா ? நண்றி,, A.S M ஹனீஃபா,கட்டாரில் இருந்து skype haneefa1198

  9. this is not good because this for the school chiled they will watch and get the note from hear please don’t play or jok in this site i homly request don’t miss use this site this site is one of public knology

    thanks

  10. தளம் or தலம் எது சரி சகோதரியே???? தளம் என்பது தட்டையான இரு பரிமாண பரப்பு என்று நினைக்கிறேன்… தலம் என்றால் இடம் அல்லது பூமி என்று பொருள் படும் எனவே உங்கள் கூற்றுப்படி புத்தலம் தானே சரி…..

  11. மகள் பாத்திமா ஷானாஸ் உங்கள் ஆசிரியைக்கும் yaaro பிழையாக சொல்லிக்கொடுத்துள்ளது போல் தெரிகிறது. ”எத்தளம் போனாலும்……….”: என்ற ஆரம்பத்திற்கும் உங்கள் விளக்கத்திற்கும் தொடர்பே இல்லையே மகள் ?

    1. யோசிக்க வேண்டிய விடயம் தான் ஆசிரியர் அவர்களே, நீங்கள் பெற்றிருக்கும் அனுபவமும் திறமையும் எனக்கு இல்லை என்பதாலோ என்னவோ எனது வயதிற்கு இவ்விளக்கம் சரியாகவே பட்டது. பேச்சு வழக்கில் எதுகை மோனை பேணுவதற்காக ஒருவேளை “எத்தளம்…….” என ஆரம்பித்து “புத்தளம்……..” என முடித்திருக்கலாம். ( எங்க போனாலும் புத்திசாதுரியத்தோட நடந்துகொள்ள வேணும் எண்டு பெரியவங்க சொல்லுவாங்க !!) அல்லது ஒருவேளை அது உண்மையாகவே புத்தளத்துக்காகவே சொல்லப்பட்ட ஒரு மொழியாகக் கூட இருக்கலாம். நீங்கள் அறிந்தவற்றைப் பகரலாமே !

      1. இல்லமா. எனக்குப் பட்டத சொன்னன். விவாதமோ அல்லது நான் சொல்வதுதான் சரி என்பதோ எனது வாழ்வில் கிடையாது மகள். நீங்க வெட்டின மரத்திலேயே சாத்திறீங்க போல தெரியுது?????

  12. எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே என்ற பழமொழி எவ்வாறு எப்போது தோன்றியது என்பதையும் குறிப்பிட்டால் நன்று

    1. உண்மையில் “எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே, புத்தளம் போனாலும் புத்தியோடு போ” என்ற இந்த பழமொழி புத்தள நகரை குறிப்பிட்டு சொல்லப்பட்டது அல்ல. எமது முன்னோர் கூறிய அப்பழமொழிக்கு உண்மையான அர்த்தம் சுவாரஷ்யமான ஒன்று. எவ்வாறெனில்,
      எத்தளம் = எந்த + தளம்
      புத்தளம் = புதிய + தளம்
      தளம் என்றால் இடம். இதன்படி,
      “எந்த இடம் சென்றாலும் புதிய இடங்களுக்கு (தனியாக) செல்லாதே. அவ்வாறு புதிய இடங்களுக்கு சென்றாலும் புத்தியோடு நடந்து கொள். ”
      இதுவே அப்பழமொழி கூறும் உண்மை கருத்து. காலப்போக்கில் புத்தளத்தை குறிவைத்துச் சொல்லப்படும் ஒரு கூற்றாக ஆகிவிட்டது.

      (இது சென்ற வருடம் எனது ஆசிரியரிடம் நான் கேட்டறிந்த விடயம், எந்தளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. நான் அறிந்ததை பகர்கின்றேன்.)

    2. அது புத்தளம் aல்ல உப்புத்தளம்
      ” எத்தலம் போனாலும், உப்புத்தளம் போஹaதே ” என வரவேண்டும்

Leave a Reply